கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
இம்மாதம் 29 ஆம் திகதி அதாவது 2021/03/29 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் அதேநேரத்தில் சகல முன்பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/03/24 ஆம் திகதி பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
தற்போதைக்கு மேல் மாகாணத்தின் கொழும்ப, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய வகுப்புக்கள் மாத்திரமே நடைபெறுன்றன. ஆயினும் இப்போது ஏனைய தரங்களுக்கான வகுப்புக்களையும் ஆரம்பிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதென நாம் நம்புகின்றோம். மேலும் இது தொடர்பிலான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரையும் இப்போது எமக்கு கிடைத்துள்ளது.
நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து வகுப்புக்களில் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் உள்ளது. பிள்ளைகள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதே அதற்கான காரணமாகும். அத்துடன் கல்வி நடவடிக்கைகள் விடுபட்டுள்ளமையும் ஒரு காரணமாகும். இந்த நிலைமையினை முடிவிற்கு கொண்டு வந்து பாடசாலை நடவடிக்கைகளை யதார்த்த நிலைக்கு கொண்டு வருவது அவசியமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மார்ச் மாதம் 29 ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்விற்கு தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜித்த பேருகொட அவர்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.